மஹா சிவராத்திரி உலகளாவிய ரீதியில் இந்து மக்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மன்னாரில் இந்து தெய்வ சிலைகள் உடைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் திங்கட்கிழமை(12) இரவு இனந்தெரியாதோர் இந்த நாசக்கார செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட ‘லிங்கேஸ்வரர்’ தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை, மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதி கீரி சந்தியில் கடந்த 18 வருடங்களாக காணப்பட்ட ஆலையடி பிள்ளையார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார்-தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக பல தடவைகள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மன்னார் மாவட்ட சர்வ மத தலைவர்கள் குறித்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளதோடு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.