தமிழ் அரசியல் கட்சிகளிடம் யாழ்.ஆயர் விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் மக்களின் இன்றைய நிலையை உணர்ந்து இணைந்து செயலாற்றுமாறு தமிழ் மக்கள் பெயரால் கேட்டுக்கொள்வதாக யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் மிக நீண்ட காலத்தின் பின்னர் ஒரே நாளில் வன்முறைகள் அற்ற நிலையில் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது.

தொகுதி வாரித் தேர்தல் முறை 49 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டு விகிதாசார கலப்பு முறை தேர்தல் நடைமுறைகளின் படி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் ஒரு சில இடங்களைத் தவிர கட்சிகள் இணைய வேண்டும் என்ற தேவையையே சுட்டிக் காட்டி நிற்கின்றன. இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற ஆன்றோர் வாக்கிற்கு ஒப்ப தமிழ் மக்களின் இன்றைய நிலையையும், அவர்களின் அவசிய தேவைகளையும், முன்னுரிமைகளையும் கவனத்திற் கொண்டு எல்லா வேறுபாடுகளையும் மறந்து தமிழர்கள் என்ற ரீதியில் இணைந்து செயலாற்றுங்கள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தமிழ் மக்கள் பெயரால் வேண்டிகொள்வதாகவும், அவ்வாறு இணைந்து செயலாற்ற இறைவன் உங்களை என்றும் வழிநடத்துவாராக என்றும் ஆயர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளிடம் யாழ்.ஆயர் விடுத்துள்ள கோரிக்கை