மஹிந்தவின் ஜனாதிபதி ஆசை என்றைக்கும் எட்டாக்கனவு! மங்கள கிண்டல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதி பதவியை அடைந்து கொள்ளும் கனவு ஒருபோதும் நனவாகாது என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கின் ஊடாக உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகள் குறித்து இன்று கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான பொதுஜன பெரமுன மிகச் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது.

ஆனால் அதனை மாத்திரம் வைத்துக் கொண்டு மீண்டும் ஜனாதிபதி பதவி குறித்து மஹிந்த கனவு காண்பாராக இருந்தால் அது எட்டாக் கனவாகவே இருக்கும்.

ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலின் போது 51.28 ஆக இருந்த ராஜபக்‌ஷ எதிர்ப்பு வாக்குகள் தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலின் போது 55.35 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலில் அவர்களால் ஒருபோதும் வெல்ல முடியாது.

இதேவேளை எஞ்சியுள்ள காலங்களில் அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதற்கான முன்னெச்சரிக்கையை வாக்காளர்கள் இந்தத் தேர்தலின் ஊடாக வழங்கியுள்ளனர் என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.