எந்தக் காலத்திலும் அரசை மாற்ற முடியாது! ஏ.லோறன்ஸ்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகாத நிலையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி சபைகளை நாம் கைப்பற்றி விட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா, மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியது தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிகளை தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கின்ற வேளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தின் 11 சபைகளை கைப்பற்றி விட்டோம் என உறுதியாக தெரிவிப்பது வேடிக்கைக்குரிய விடயமாகும்.

நடந்து முடிந்த தேர்தல் ஊடாக அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சியை கொண்டு வர முடியாது. 2020ஆம் ஆண்டு வரை இந்த அரசாங்கம் தொடர்ந்தே இருக்கும்.

கடந்த இரண்டரை வருடங்களில் இந்த அரசாங்கத்தின் ஊடாக மலையக பகுதிகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கி அபிவிருத்தி பணிகளையும் நல்ல பல காரியங்களையும் செய்து வருகின்றது.

இந்த நிலையில் அது தடைப்படும் வகையில் உள்ளூர் அதிகாரி சபைகளின் ஆட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம் என தெரிவிக்கும் இ.தொ.கா தொழிலாளர்களின் சம்பள நிலுவை யானை சாப்பிட்டு விட்டதாக கூறப்படும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் அபிவிருத்திகளை இம்மக்களுக்காக பெற்றுக்கொடுக்க சேவை செய்ய முடியுமா ?

முழு நாட்டிலும் இன பிரச்சினையை முன்னெடுக்கும் மஹிந்த ராஜபக்சவை வெற்றியடைய செய்து உள்ளது.

மலையகத்தின் அபிவிருத்தியை இடைநிறுத்தும் வகையில் இ.தொ.கா அவர்களுடன் கைகோர்த்து இருப்பது தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக பிரதேசங்களில் முன்னெடுத்து வருகின்ற அபிவிருத்தி பணிகளை தடுக்காது.

எனவே நுவரெலியா மாவட்டத்தில் கனிசமான சபைகளை தனியாக ஆட்சியமைக்க கூடிய நிலை உருவாகி வருகின்றது.

எந்தவிதத்திலும், அரசாங்கமும் மாறாது. செய்கின்ற அபிவிருத்தியும் மாறாது என குறிப்பிட்டுள்ளார்.

Image result for ஏ.லோறன்ஸ்