தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயார்! கஜேந்திரகுமார்

தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில். உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர். அதனால் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத்துரோகத்தையும் எடுத்து கூறினோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே அந்த விமர்சனங்கள் சில வேளைகளில் கடுமையாக இருந்திருக்கலாம், ஒற்றையாட்சிக்கு இணங்கி பௌத்தத்திற்கு முன்னுரிமைக்காக இணங்கியமையாலையே அவ்வாறு விமர்சனங்கள் அமைந்தன

தமிழ் தேசிய பேரவை மாற்றத்திற்கு பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது. நாம் காலம்காலமாக முன் வைக்கும் குற்றசாட்டு இனத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர் அதற்கு எதிராகவே பேசினோம். நாம் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல

தமிழினம் நடுத்தெருவில் நிற்க தலமைத்துவம் வழங்கியவர்கள் நீக்கப்பட்டு நல்லதொரு தலைமைத்துவம் வகிக்க ஊழல் இல்லாத மோசடி இல்லாத வகையில் உள்ளூராட்சி சபையை நடத்த நல்லதொரு தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்து செல்வோம்.

தற்போதைய யதார்த்தம் என்னவெனில் தமிழ் மக்கள் மிக உறுதியாக தேசியத்தின் பக்கம் நிற்கின்றார்கள். கூட்டமைப்பை பொறுத்த வரையில் நம்பிக்கைத்துரோகம் இழைத்து உள்ளது.

கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தேசியத்துடன் ஊழலற்று இயங்க விரும்புவோர் எம்முடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லாம். அவர்களை இணைக்க நாம் என்றுமே தயாராகவே உள்ளோம்.

தமிழ் தேசியத்தை காப்பாற்ற, பாதிக்கப்பட்ட தாயக நிலப்பரப்பை கட்டியெழுப்ப உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் முன் வரவேண்டும்

இரண்டு வருடத்திற்கு முன்னர் எம்மை மிக கேவலமாக விமர்சித்தவர்கள் வாய் மூடி நிற்கும் வகையில் உழைத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயார்! கஜேந்திரகுமார்