யாழில் பௌத்த பிக்குவின் செயற்பாடு? வைரலாகும் புகைப்படம்!

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு பல இடங்களிலும், பல மாவட்டங்களிலும் குறித்த நிகழ்வுகள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பௌத்த பிக்கு ஒருவரின் செயற்பாடு அங்கிருந்தவர்களை சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளது.
குறித்த நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட்ட போது அங்கிருந்த இந்து, முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் போது பௌத்த பிக்கு ஒருவர் மட்டும் அதற்கு மரியாதை கொடுக்காமல், அவருக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்.

இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருவதுடன், பலரும் அதற்கு விசனம் தெரிவித்து கருத்துக்களை பதிவேற்றியுள்ளனர்.

தேசிய கீதம் என்பது ஒரு நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு மதிப்பளிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும்.

ஆனால் இந்த நாட்டில் பௌத்த பிக்குகளுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து பௌத்த பிக்குகளும் இலங்கையின் தேசிய கீதம் பாடப்படும் சந்தர்ப்பங்களில் மரியாதை செலுத்துவது கிடையாது என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று.