நீதிமன்றை உடைத்து கஞ்சா திடிய சந்தேகநபர்களுக்கு வேறு குற்றத்துக்கு தண்டனை

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மூவரில் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தையும் இருவருக்கு தலா 60 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தையும் விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
எனினும் திருடிய குற்றச்சாட்டு வழக்கு விசாரணைக்காகத் திகதியிடப்பட்டது.
2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் 21ஆம் திகதி கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபா பெறுமதியான 12 பார்சல்களாகக் கட்டப்பட்டிருந்த சான்றுப்பொருள் கஞ்சா திருடப்பட்டது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா பிரசாந்தன் அல்லது குமா அல்லது குகன், பத்மநாதன் தர்சன் மற்றும் கணேசன் நதீஸ்வரன் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 2 கைக்கோடரிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்களிடம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கேடுகள் கையளிக்கப்பட்டன. சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் தனித்தனியே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன், அரச சொத்தைத் திருடிய குற்றச்சாட்டுக்கு மூவருக்கு எதிராகவும் தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்களைச் வவுனியா சிறைச்சாலை அலுவலர்கள் மன்றில் முற்படுத்தினர். சந்தேகநபர்களுக்கு தனித் தனியே குற்றப்பத்திரிகைகள் வாசித்துக் காண்பிக்கப்பட்டன. 
6 கிலோ 255 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை சந்தேகநபர்கள் மூவரும் மன்றில் ஏற்றுக்கொண்டனர். எனினும் அரச சொத்தான கஞ்சா சான்றுப்பொருளைத் திருடிய குற்றச்சாட்டை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
“நடராசா பிரசாந்தன் அல்லது குமா அல்லது குகன் என்ற எதிரிக்கு இரண்டு குற்றங்களுக்குமாக 80 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்படுகிறது. அதனை அவர் செலுத்தத் தவறின் 8 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். பத்மநாதன் தர்சன் மற்றும் கணேசன் நதீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு குற்றங்களுக்குமாக தலா 60 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்படுகிறது. அதனை அவர்கள் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள் மூவரும் தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறியதால் சிறைத் தண்டனைக்கான கட்டளையை மன்று வழங்கியது.
மேலும் அரச சொத்தைத் திருடிய குற்றச்சாட்டு மீதான மூவருக்கும் எதிரான வழக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டது.
வழக்குகளை வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் நெறிப்படுத்தினார்.