மாலைதீவு பாராளுமன்றம் பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைப்பு

மாலைதீவுகளின் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமையால் மாலைதீவுகளின் அரசியல் நெருக்கடி வலுவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள எதிரக்கட்சித்தலைவர்கள் ஒன்பது பேரை விடுதலை செய்து அவர்களுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரணை செய்யுமாறு மாலைதீவுகளின் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யாமீனை பதவியிலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் தயாராவதாகவும், நீதிமன்றத்தில் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டாமெனவும் அந்நாட்டு சட்டமா அதிபர் பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.