யாழில் சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள் , வீடியோ)

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், இன்று(04.02.2018) யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது.

இதன்படி, யாழ். மாவட்டத்திற்கான சுதந்திர தின நிகழ்வுகள், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலையில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர், மற்றும் பொலிசாரின் அணுவகுப்புகள் மற்றும் சமய கலை கலாசாரங்களை அடையாளப்படுத்தும் விதமான ஊர்வலங்களும் இடம்பெற்றன. தமிழ் மற்றும் சிங்களத்தில் தேசியகீதம் இசைக்கப்பட்டு, மரியாதை வழங்கப்பட்டதுடன், நாட்டிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் 70ஆவது சுதந்திர தினத்தை அடையாளப்படுத்தும் விதமாக மரக்கன்றுகளும், விருந்தினர்களால் நாட்டி வைக்கப்பட்டது.

அரச அதிகாரிகள், அலுவலர்கள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்