அமாவாசையால் ஆண்களுக்கு ஆபத்தா..? வீட்டு வாசலில் விளக்கேற்றும் பெண்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் ஒருசில வதந்திகள் கிளம்பி பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வருவதால், பெண்கள் தங்கள் வீட்டின் ஆண்களுக்காக வீட்டின் முன் விளக்கேற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு தை மாதம் முதல் தேதியே அமாவாசையாக உள்ளதால் ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக தங்கள் வீட்டில் உள்ள கணவர், சகோதரர், தந்தை, மகன் போன்றவர்களுக்காக பெண்கள் வீட்டின் முன் விளக்கேற்றி வருகின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளின் முன் விளக்கு எரிந்து கொண்டிருக்கின்றது.
மேலும், ஒரு வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கின்றார்களோ அத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் என்றும் வதந்தி பரவி வருவதால் ஒரே வீட்டில் பல விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் தோன்றிய இந்த வதந்தி ஒருசில மணி நேரங்களில் காட்டுத்தீ போல் பரவி சென்னை வரை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.