எந்தக் கிழமைகளில் எந்தக் கடவுளுக்கு விரதம் இருப்பது பலன் தரும்?

ஞாயிற்றுக்கிழமை:

ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம். பலன்கள்: ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய்கள் அகலும்.
திங்கட்கிழமை:
திங்கட்கிழமை ஈசனுக்கு சோமவார விரதம் இருப்பது நல்லது. கார்த்திகை மாதத்ட்தில் வரும் திங்கட் கிழமைகளில் சோமவாரத்தில் விரதம் இருந்தால் மிகுந்த நற்பலன்களை பெறலாம். பலன்கள்: திங்கட்கிழமை விரதம் இருந்தால் கணவன் – மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
செவ்வாய்க்கிழமை:
மௌன அங்காரக விரதம் இருக்க அருமையான நாள். செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கும். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று கந்தக் கடவுளை வழிபடுவது நல்லது. பலன்கள்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் கடன் பிரச்சனை தீரும். மேலும் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கும்.
புதன்கிழமை
புதன்கிழமை விரதம் இருந்தால் கல்வி, புகழ், செல்வம் கிடைக்கும். இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். புதன்கிழமை நரசிம்மர் கோவிலுக்கு சென்று பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு. பலன்கள்: புதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
வியாழக்கிழமை:
வியாழக்கிழமை நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குவது சிறப்பு. பலன்கள்: குருவின் அருளால் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் கிட்டும். சகல காரியங்களும் கைகூடும்.
வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் செய்து வழிபடலாம். பலன்கள்: வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
சனிக்கிழமை:
சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது சிறப்பாகும். மேலும், திருமாலுக்கு உகந்த நாள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது நல்லது.
பலன்கள்: சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.