யாழில் வாழைப்பழங்களுக்கு ஏற்பட்ட நிலை:காரணம் இதுதானாம்!(Video)

யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகக் காணப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தையின் நேற்றைய(01) வாழைப்பழ விலை நிலைவரப்படி,
முன்னர் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 40 ரூபாவாகவும், 100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ இதரை வாழைப்பழம் 35 ரூபா முதல் 40 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை ஒருகிலோ செவ்வாழைப்பழம் 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கப்பல் வாழைப்பழம் 120 ரூபா முதல் 130 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.

வாழைப்பழங்களின் திடீர் வீழ்ச்சிக்கான காரணம் தொடர்பில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக வாழைப்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் முதிர்ந்த வியாபாரியொருவர் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ,

வாழைப்பழத்துக்கான தேவைகள் கூடுதலாகக் காணப்படும் போது விலைகள் அதிகரித்த நிலையில் விற்கப்படுகின்றன. ஆனால், தற்போது சந்தைக்கு வாழைப்பழக் குலைகள் தாராளமாக எடுத்துவரப்படுகின்றன. தைப்பூச நாளுடன் வளர்பிறையுடன் வரும் திருமண நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. அத்துடன் மாசிமாதம் முழுவதும் சுபகாரியங்களுக்கான நாட்கள் இல்லாத காரணத்தால் வாழைப்பழத்துக்கான தேவைகளும் குறைவடைந்துள்ளன. இதுவே வாழைப்பழ வீழ்ச்சிக்கான காரணமெனத் தெரிவித்தார்.

இதேவேளை,வாழைப்பழ விலைகளின் திடீர் வீழ்ச்சியையடுத்து உணவுத் தேவைகளுக்க வாழைப்பழங்களைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.