வடக்கு கிழக்கெங்கும் விகாரைகள் அமைக்க ஆணை வழங்கப் போகின்றீர்களா ? யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் கேள்வி (வீடியோ)

தேர்தலில் பின் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது அதே நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளது. 
ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியப் பேரவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பேவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் அவ்வாறு விகாரைகள் அமைப்பதாயின் அந்தந்த பிரதேச சபைகளின் அனுமதி பெறப்படவேண்டும். நீங்கள் அவர்களுக்கும் அவர்களுக்குத் துணைபோகின்ற தமிழ்த் தரப்புக்களுக்கும் வாக்களித்துவிட்டு இங்கு விகாரைகள் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்போகின்றீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று (02.02.2018) வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர்,
“தேர்தலின் பின் வடக்கு கிழக்கிலே ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய மரபுவழித் தாயகம் என நாங்கள் கூறிவருகின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே சிங்கள மயப்படுத்தலை தீவிரப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான விகாரைகளை இங்கு நிறுவுவதற்கு தற்போது நல்லாட்சி எனக் கூறுக்கின்ற இந்த அரசாங்கம் முனைப்புடன் ஈடுபட்டுவருவதை ரணில் விக்கிரமசிங்கவினுடைய பேச்சு வெளிப்படுத்தியிருக்கின்றது. 
மாறி மாறி இலங்கையில் அரசாட்சி செய்துவருகின்ற அரசாங்கங்கள் அது ரணில் விக்கிரமசிங்கவினுயை ஐக்கிய தேசியக் கட்சியாகவிருக்கலாம் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம் இரண்டும் மற்றைய கட்சிகளை விட தாங்கள் பௌத்த மேலாதிக்க சிந்தனை வாதத்தில் மேலானவர்கள் என காட்டிக்கொள்ளவே முற்படுகின்றார்கள். அதனடிப்படையிலேயே செயற்பட்டுவம் வருகின்றார்கள். மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் வடக்கு கிழக்கை சிங்களமயப்படுத்துவதில் தீவிரமாக இருப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது. 
இடைக்கால அறிக்கையின் வரைபுகூட பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்துவதையே தெட்டத்தெளிவாகக் காட்டியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்துவதற்கு அவர்கள் இணங்கியிருக்கின்றார்கள். 
இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பௌத்தத்துக்கு முன்னுரிமைகொடுகின்ற இடைக்கால அறிக்கையை பரிந்து பேசுகின்ற தரப்புக்களை அடியோடு நிராகரிக்க வேண்டும். 
பொத்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அதிலும் குறிப்பாக வடகிழக்கில் பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை நாங்கள் முற்றாக நிராகரிப்போம். எனவே இந்த விடையங்களை தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற சைக்கிள் சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என நாங்கள் மக்களிடம் கேட்டக்கொள்கின்றோம். 
மக்களுக்கு ஒரு விடையத்தை எங்களால் தெளிவாகக் கூறிக்கொள்ள முடியும் ஒரு பிரதேசத்தில் விகாரை ஒன்று அமைக்கப்படவேண்டுமாக இருந்தால் அந்தப் பிரதேச சபையிடம் அனுமதி பெறப்படவேண்டும். உங்களுக்குத் தெரியும் அண்மையில் பௌத்த துறவியின் சடலத்தை யாழ் நகர மத்தியில் எரித்தார்கள். அதற்கும் யாழ் மாநகரசபையின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவ்விடையத்தில் எம்மைத்தவிர எந்த ஒரு அரசியல் கட்சியும் அதற்கு எதிரான நடவடிக்கைக்கு தயாராக இருந்திருக்கவில்லை” – என்றார்.