காணாமல்போன பொறியியலாளர் கல்லடி பாலத்திற்கு அருகில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மின்சாரசபை காரியாலயத்தில் மின்சார அத்தியட்சகராக கடமையாற்றிவந்த க.உமாரமணன் (33வயது)என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு காணாமல்போனதாகவும் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவரது சடலம் நேற்று இரவு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை மரண விசாரணையை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.