சென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கும் பாரதி விழா!

தமிழகத்தின் புகழ் பூத்த பாரதியார் சங்கமும் யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து நடத்தும் பாரதி விழா எதிர்வரும் 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சென்னை பாரதியார் சங்கத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் தலைமை விருந்தினராகவும் யாழ். இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
.நிகழ்வில் சென்னை சரஸ்வதி பரதநாட்டிய வித்தியாலய இயக்குநர் நர்த்தன சிரோண்மணி கிரிஜா முருகன் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் கலைமாமணி சோபனா ரமேஷ் வழங்கும் பாரதி பாடல்களுக்கான பரத நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளன.
நிகழ்வின்போது இயற்றல் பெயர்த்தல் செய்தல் என்ற பொருளில் தமிழகப் பேராசிரியர் உலகநாயகி பழனி, மகாகவி பாரதியின் சமூகப் பார்வை என்ற பொருளில் பேராசிரியர் வெ.இராசேந்திரன், வீழ்வெனென்று நினைத்தாயோ என்ற பொருளில் யாழ்ப்பாணம் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆகியோரது சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன.
விழாவின் போது யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பாரதியார் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார். அத்துடன் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, கவிஞர் சோ.பத்மநாதன், செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆகிய இலங்கைத் தமிழார்வலர்களும் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் வெ.இராசேந்திரன், பிரான்சைச் சேர்ந்த சாம் விஜய் ஆகிய தமிழார்வலர்களும் பாரதி பணிச்செல்வர் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.