தேர்தல் வன்முறை: சு.க. வேட்பாளரின் உடைமைகள் தீயிட்டு எரிப்பு!

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல் கையூமின் வீட்டு உடைமைகள் மற்றும் வாகனம் என்பன இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – பாலமுனை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

திடீரென தீ பரவியதை கண்ட வீட்டார் அங்கிருந்து வெளியேறியதோடு, அயலவர்களின் துணையுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, வேட்பாளரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து வேட்பாளரின் வீட்டிற்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.