குப்பை வண்டியில் பத்திரிகையாளர் உடல்!

கர்நாடகாவில் விபத்தில் இறந்த உள்ளூர் பத்திரிகையாளரை குப்பை வண்டியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மௌனிஷ் போதராஜ் (28), என்பவர் சனிக்கிழமை ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு நிருபராக தனது கடைசி வேலையை முடித்து விட்டு,பைக்கில் வீட்டிற்குத் திரும்பும்போது, அவர் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலே அவர் இறந்துவிட்டார்.

ஹங்குல் தாலுக்கில் குண்டுரு கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ஹங்குல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குப்பை வண்டியில் இறந்த பத்திரிகையாளரின் உடலை வைத்து ஹங்குல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி,கண்டனத்தைப் பெற்றது.

போலீசாரின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயலாகும். ஆம்புலன்ஸ் அல்லது மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் குப்பை வண்டியில் வைத்து உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதற்கு கடும் கண்டனம் எழும்பும் நாங்கள் விரைவில் போராட்டம் நடத்தவுள்ளோம் என கர்நாடக மாநில பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஹவேரி மாவட்ட தலைவர் நிங்கப்பா கூறியுள்ளார்.

இதை எதிர்த்து போலீசாரிடம் நாங்கள் பேசும் போது, அவர்கள் எங்களது வார்த்தையைக் காது கொடுத்துக் கேட்கவில்லை. எந்தவொரு மனிதரையும் இந்த வண்டியில் கொண்டு செல்ல கூடாது என போதராஜின் உறவினர் நாகராஜ் கூறினார்.

இதுகுறித்து ஹவேரி மாவட்டத்தின் எஸ்.பி. கே.பரசுராம், அவரது உடலைத் தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல போலீசார் முயற்சி செய்தனர். ஆனால், திருவிழா காரணமாக எந்தவொரு வாகனமும் கிடைக்கவில்லை. பொதுவாக, உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வாகனங்களைப் பெறுவோம். ஆனால் இந்த நேரத்தில் எங்களால் எதையும் பெற முடியவில்லை. யாரையும் காயப்படுத்த நாங்கள் நினைக்கவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது உடல் ஆம்புலன்ஸுக்கு மாற்றப்பட்டது என கூறினார்.