வருமுன் காக்க வழிகாட்டும் லேப்ராஸ்கோப்பி

எந்தப் பிரச்சினைக்கும் உடனடி மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையுமே சிறந்தது. ஆனால் மருத்துவரிடம் போனால் சின்ன பிரச்சினையைக் கூடப் பெரிதாக்கி விடுவார்களோ, ஒபரேஷன் அது இதுவென பெரிதாக இழுத்து விட்டுவிடுவார்களோ என்கிற தயக்கம் பலருக்கும் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு .
“பெண்களுக்கு ஏற்படுகிற பெரும்பாலான பிரச்சினைகளைக் கண்டறியவும் சரி செய்யவும் லேப்ராஸ்கோப்பி என்கிற எளிய முறை சிகிச்சை உதவுகிறது.
லேப்ராஸ்கோப்பி என்றதுமே அதை அறுவை சிகிச்சையுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. வரும் முன் காக்கவும் வழிகாட்டும்.
மருந்துகளுக்குக் கட்டுப்படாத நீண்டநாள் வயிற்று வலிக்கான காரணம், கணவன்மனைவி இருவரிடமும் எந்தப் பிரச்சினைகளும் இல்லாதபோதும் குழந்தையின்மைக்கான காரணம், கர்ப்பத்தடைக்காக பொருத்தப்பட்ட கொப்பர் டி காணாமல்போவதைக் கண்டுபிடிக்க (சில நேரங்களில் கொப்பர் டியானது வயிற்றுக் குழிக்குள் பொத்தலிட்டு மறைந்துகொள்ளலாம்.)பி.சி.ஓ. எனப்படுகின்ற 
சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினை மற்றும் என்டோமெட்ரியாசிஸ் (முறையற்ற மாதவிலக்கு மற்றும் குழந்தையின்மைக்கான காரணங்கள் )பிரச்சினைகளைக் கண்டறிய… இப்படி எல்லாவற்றையும் லேப்ராஸ்கோப்பி உதவியுடன் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம்.
குழந்தையின்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் தான் காரணம் என்பது உறுதியானால் சினைப்பை ட்ரில்லிங் முறை சிகிச்சையின் மூலம் அதைக் குணப்படுத்த லேப்ராஸ்கோப்பியே சிறந்தது. கருக் குழாயில் தரித்த கர்ப்பத்தின் சரியான நிலை மற்றும் இடத்தை கண்டறியவும் லேப்ராஸ்கோப்பியே அவசியமாகிறது. சினைப்பை கட்டிகளை சினைப்பைக்கு சோதாரமின்றி சரி செய்யமுடிகிறது. இன்னும் பைப்ரோய்ட்டை செய்யவும் கர்ப்பபையை நீக்கவும் கருத்தடைக்கும் கருத்தடை செய்துகொண்ட பெண்கள் மறுபடி கர்ப்பம் தரிக்க விரும்பும்போது ரீகேனலைசேஷன் சிகிச்சையை சாத்தியமாக்கி கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் லேப்ராஸ்கோப்பி முறை பெரியளவில் உதவுகிறது.
எனவே நோய்க்கான காரணத்தைக் கண்டறிய மட்டுமன்றி அதற்கான சிகிச்சையை சுலபமாக்குவதிலும் லேப்ராஸ்கோப்பியின் பங்கு மகத்தானது. ஒப்பன் சேர்ஜரி எனப்படுகிற பொதுவான அறுவை சிகிச்சை முறைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப பல வாரங்கள் ஆகும். தவிர இரத்த இழப்பும் அதை ஈடுகட்ட திரும்ப இரத்தம் ஏற்றவேண்டியதும் அதிகமாக அவசியமாக இருக்கும். அறுவைக்குப் பிறகான தழும்பும் பெரிதாக வெளியே தெரியும்.
ஆனால் லேப்ராஸ்கோப்பியில் மிகச்சிறிய துளையிட்டு எத்தனை பெரிய அறுவையும் செய்யப்படுவதால் தழும்பு தெரியாது. இரத்த இழப்பும் குறைவு. மருத்துவமனையில் தங்க வேண்டிய நாட்களும் குறைவு. எனவே இனி நோய்க்குப் பயந்து கொண்டு அதைக் கண்டறியவோ, அதற்கான சிகிச்சைகளைப் பற்றிப் பயந்துகொண்டோ, பெண்கள் அலட்சியமாக இருக்கத் தேவையில்லை.