பாடசாலை வருகையை பகிஸ்கரித்து ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டும் மாணவர்கள்!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் இன்றைய தினம் 130 மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை என தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 100ற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் ஆசிரியர்களை கண்டித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு பொறுப்பில்லாமல் செயற்படும் ஆசிரியர்களை, உடனடியாக கல்வி திணைக்களம் இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த இரு ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யும்வரை பாடசாலைக்கு தமது பிள்ளைகளை அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரனிடம் வினவியபோது தமக்கு இந்த விடயம் தொடர்பில் முறைபாடு கிடைத்துள்ளதாக கூறினார்.

எனவே இது தொடர்பாக ஓர் இரு நாட்களில் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணித்துளளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாடசாலை நாட்களில் மாணவர்களுடைய கல்வியை பாதிக்கும் அளவிற்கு பெற்றோர்கள் நடந்துக் கொள்ள கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.