கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா அனைத்து ஏற்பாடுகளும் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் இலங்கையிலிருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர்கள். திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரச அதிபர் தலமையில் மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கச்சதீவில் இம்முறை இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை இலங்கையில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஏற்ற வகையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவிழாவுக்கான ஒழுங்குகளுக்குரிய பிரதான பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர். அதே போன்று ஏனைய துறையினர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் படி தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர மலசல கூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசல கூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை நடைபெறும்.

அதே போன்று குறிகாட்டுவனில் இருந்து கச்சதீவுவரை காலை 5 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 2 மணி வரை படகுச் சேவைகள் இடம்பெறும். படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபா அறவிடப்படவுள்ளது. அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளன. பயணிகள்பாதுகாப்பு அங்கி அணியவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 200 பொலிஸார் சேவையில் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்ர் என தெரிவித்தார்.