பொலிஸ் விசேட அறிவிப்பு!

சமூகவலைத்தளங்களில் தனிநபருக்கு எதிராகவோ அல்லது நிறுவனங்களுக்கு எதிராக செயற்படுவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை தலைமையகம் எச்சரித்துள்ளது.

அண்மைக்காலமாக முகப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ஒருவருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அநாகரீகமான இடுகைகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

குறிப்பாக, ஆபாச நடிகர் நடிகைகளின் உடலையும், பழிவாங்க நினைப்பவரின் தலைப்பகுதியையும் இணைத்து பதிவேற்றம் செய்யும் கலாசாரம் இலங்கையில் அதிகரித்துள்ளதாக காவற்துறை தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அறியத்தருமாறு காவல்துறை தலைமையகம் கேட்டுகொண்டுள்ளது.

இதன்படி, 0112 320 141/ 0112 320 142/ 0112 320 143/ 0112 320 144/ 0112 320 145 அல்லது 0112 326 979 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு சைபர் பிரிவிற்கு அறிவிக்க முடியும், பதிவேற்றப்பட்ட இடுகைகளை அகற்றி கொள்வதற்காக [email protected] நிறுவனத்திற்கு 0112 691 692 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

சமூகவலைத்தளங்களில் ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை பதிவேற்றம் செய்தல், தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்தல், மத ரீதியான கருத்துக்களை தவறான வழியில் பயன்படுத்துதல், விபசாரத்திற்கான விளம்பரங்களை மேற்கொள்ளுதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதேபோன்று, போதைப்பொருள் விற்பனைக்கான தொடர்புகளை அறிவித்தல், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எழுத்துரு அல்லது காணொளி பதிவேற்றங்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட முதன்மை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, சட்டவிரோத ஈடுபடுவர்கள் தொடர்பிலும் அவர்களின் குடும்ப பின்னணி தொடர்பிலும் ஊடகங்களில் பகிரங்கமாக பொது விளம்பரம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.