கடலில் காணாமல் போன மாணவனின் சடலம் கண்டெடுப்பு!

ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நீராடிய நிலையில் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் இன்று சனிக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய அப்துல் ஸலாம் அஸ்பஹான் எனும் மாணவனின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சத்தாம் ஹூஸைன் கிராமத்தை வசிப்பிடமாக கொண்ட இம்மாணவன் வெள்ளிக்கிழமை பிற்பகல் புன்னைக்குடா கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது காணாமல் போயிருந்தார்.

உடனடியாக மீனவர்களும் கடற்படையினரும் தேடுதலில் ஈடுபட்டபோதும் மறுநாள் சனிக்கிழமையே அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.