கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம்

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு முற்பகுதியில் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்ட பணிகளை நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“நாட்டுக்கு அவசியமான வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்கு துறைமுக நகரத் திட்டம் உதவியாக இருக்கும்.
சுமார் 2 இலட்சம் மக்களுக்கான வாழ்விடமாக புதிய நவீன நகரம் மாறவுள்ளது.
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்துக்கு மீளுயிர் அளிக்கும் வகையில், இந்தியப் பெருங்கடலின் கேந்திரமாக மாறும் இலக்கை அடைவதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.
துறைமுக நகரத் திட்டம் கொழும்பு மாநகரசபையின் கீழ் கொண்டு வரப்படும்.
கொள்ளுப்பிட்டியுடன் இதனை இணைக்கும் வகையில், இலகு தொடருந்து போக்குவரத்து வசதிகளுடன் கூடிய நிலத்தடி சுரங்கமும் அமைக்கப்படும். பல வானுயர்ந்த கட்டடங்களுடன், விசாலமான பொது நகரப் பூங்காவும் அமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.