புனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்: இளஞ்செழியன்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் நீதிபதிகள் அனைவரும், மாவட்டத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, புனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ். நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு உறுதியுரை எடுத்தனர். இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து தலைமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய இளஞ்செழியன், ‘நீதிச் சேவைக்குள் காலடிவைத்து 21ஆவது ஆண்டை ஆரம்பிக்கின்றேன். 2018ஆம் ஆண்டில் காலடிவைக்கும் நாங்கள் நீதிச் சேவையின் புனிதமான கடமையைப் பொறுப்பேற்று முன்னெடுக்க வேண்டும் என்பது இந்த நிகழ்வின் முக்கியமானது.
நீதிச்சேவை புனிதமானது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கான சேவையை வழங்கவேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தின் நீதிபதிகளான நாங்கள் எமது கடமையை புனிதமாக முன்னெடுத்து வருகின்றோம். யாழ்ப்பாண மண்ணின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் நீதிச் சேவையின் புனிதத்தைப் பேணவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம்’ – என்றார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இ.கண்ணன், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் திருமதி தாரணி கணேசநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
யாழ். மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் உத்தியோகத்தர்களுக்கான உறுதியுரையை நீதிபதிகள் முன்னிலையில் நிறைவேற்றிவைத்தார்.
இதில், யாழ். மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், யாழ். மாவட்ட நீதிமன்றம், யாழ். நீதவான் நீதிமன்றம் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.