மிளகாய் பொடியைத்தூவி ஒரு கோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 45 இலட்சம் ரூபா பணம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து லொறியில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று காலை 08.00 மணியளவில் பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த இருவர் நுவரெலியா பூங்கா வீதியில் வைத்து லொறியை வழிமறித்துள்ளனர்.
பின்னர் லொறியின் கண்ணாடியை உடைத்து, மிளகாய் பொடியை சாரதி மற்றும் பணத்தை கொண்டு சென்ற நிறுவன ஊழியர் மீதும் தூவி விட்டு பணப் பைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் வண்டியில் பாதுகாப்பு பெட்டகம் இருந்த போதும் அதில் பணம் வைத்திருக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
எனினும், இந்த விடயம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.