பாடசாலையினால் நிராகரிக்கப்பட்ட மாணவி- பரீட்சையில் முதலிடம் பிடித்து சாதனை!


பாடசாலையினால் பரீட்சை எழுத அனுமதி மறுக்கப்பட்ட போதும், உயர்தரத்தில் தோற்றிய மாணவி ஒருவர் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின் வணிக பிரிவில் தோற்றிய ஹரினி நிஹாரா கஜசிங்க என்ற மாணவியே இந்த மகத்தான சாதனை செய்துள்ளார்.

தங்காலை மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஹரினி நிஹாரா என்ற மாணவி உயர்தரத்தில் ஆரம்பத்தில் உயிரியல் பிரிவை தெரிவு செய்துள்ளார். எனினும் ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்னர் உயிரியல் கற்கையை தொடர அவருக்கு கடினமாகியுள்ளது.

அதன் பின்னர் வர்த்தக பிரிவினை தெரிவு செய்தமையின் ஊடாக அந்த பாடசாலையின் சட்டத்திட்டங்களுக்கமைய அங்கு வர்த்தக பிரிவில் உயர் தர பரீட்சை எழுத அவர் அனுமதிக்கப்படாமையினால், வெளி மாணவியாக பரீட்சை எழுதியுள்ளார்.

வணிக பிரிவில் தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், வர்த்தகம் ஆகிய பிரிவுகளை தெரிவு செய்த ஹரினி குறுகிய காலத்தில் அந்தப் பாடங்கள் தொடர்பான திறனை பெற்றுள்ளார்.

“நான் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்பியே உயிரியல் பிரிவை தெரிவு செய்தேன். எனினும் என்னால் பல்கலைக்கழகம் செல்ல கடினமான நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் வணிக பிரிவை இடையில் தெரிவு செய்தேன். நான் இவ்வாறு பாடத்தை மாற்றியமையால் எனக்கு கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அச்சமடைந்தனர். எனினும் உயர்தரத்தில் சிறந்த சித்தியை பெற்றுள்ளேன் என மாணவி ஹரினி பெருமையாக தெரிவித்துள்ளார்.