சில தினங்களுக்கு முன் காணாமற்போனவர் யமுனா ஏரியில் சடலமாக மீட்பு!!

யாழில் கடந்த 19ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் நபரொருவரின் சடலம் இன்று காலை நல்லூர் பகுதியிலுள்ள யமுனா ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் யாழ். செம்மணி வீதியை சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) எனும் 66 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

தவில் வித்துவானான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஜெயராசா கடந்த 17ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார்.உறவினர்கள் அவரை தேடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இது தொடர்பில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர்.இந்த நிலையில், இன்று காலை இவரது மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்ற வேளையில் ஏரி பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், யமுனா ஏரி தண்ணீரை அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் அங்கு பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தால், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்