பூநகரி – பரந்தன் வீதியில் விபத்து – கல்வித் திணைக்கள உத்தியோகத்தர் உயிரிழப்பு!

பரந்தன்- பூநகரிக்கு இடையில் வடக்கு மாகாண திணைக்களத்தின் பிக் கப் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து இன்று முற்பகல் 11.35 மணியளவில் இடம்பெற்றது.

கல்வித் திணைக்களத்தின் பிக்கப் வாகனத்தின் சில்லு ஒன்று காற்றுப் போனதால் கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நாளை நடத்தப்படவுள்ள முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கான கடமைக்கு உத்தியோகத்தர்கள் பயணித்த போதே விபத்து இடம்பெற்றது.

அதில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் வேலணையைச் சொந்த இடமாகவும் யாழ்ப்பாணம், ஆத்திசூடி வீதியில் வசிப்பவருமான கோபாலபிள்ளை குகன் (வயது – 35) என்ற முகாமைத்துவ உதவியாளரே உயிரிழந்தார்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பூநகரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.