செல்பியால் -இயந்திரப் படியில் சிக்கிய குழந்தை உயிரிழப்பு!

இயந்திரப்படியில் நின்றவாறு மனைவிடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார் கணவர். இதன் போது மனைவியின் கைகளில் இருந்து தவறி விழுந்த 10 மாத குழந்தை இயந்திரப் படியில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் பகுதியில் அமைந்துள்ள வணிக நிலையம் ஒன்றில் நடந்துள்ளது.

வணிக நிலையத்தில் தங்களது 10 மாத குழந்தையுடன் கணவன் மனைவி இருவர்சென்றுள்ளனர். இந்த நிலையில் இயந்திரப் படியில் சென்று கொண்டிருக்கும் போது மனைவியுடன் செல்பி எடுத்துள்ளார் கணவன்.

இருவரும் செல்பி எடுக்க முற்பட்ட போது நிலைதடுமாறி குறித்த பெண்ணின் கைகளில் இருந்த 10 மாத குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. குழந்தை பாதுகாப்புக் கம்பியில் மோதி சுவருக்கும் இயந்திரப்படிக்கும் இடையில் சிக்கி பின்னர் தரையில் விழுந்துள்ளது.

குறித்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியுற்ற பார்வையாளர்கள் விரைந்து சென்று குழந்தையைக் காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளனர்.இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் இருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தை தரையில் விழுந்த உடனேயே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.