காலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடும் மழை பெய்தமையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக காலி மாவட்ட இடர்முகாமைத்துவ மையப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் தம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை வரையான ஆறு மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் காலி ஜிந்தொட்ட பிரதேசத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 175 மில்லிமீற்றராக இங்கு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. காலி நகரத்தில் 160 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் பெய்த கடும் மழையின் காரணமாக பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேச பகுதிகளில் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக களுத்துறை மாவட்ட இடர்முகாமைத்துவ மையப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஓடைகள் மற்றும் வடிகான் கட்டமைப்பில் நீர் வழிந்தோடுவது தடைப்பட்டமை இதற்குக் காரணம் என்றும் மையப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் கேர்ணல் பிரசாத் ஜயசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடல் நாளை செவ்வாய்க்கிழமை வரை ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அலைகளின் தாக்கமும் அதிகமாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
2018ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி வரை மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும் அலைகள் காரணமாக கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அலைகளின் தாக்கமும் அதிகமாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.