சில மாதங்களில் திருமணம்! யாழ். இளைஞன் இந்தியாவில் பரிதாப பலி

இந்தியாவில் இடம்பெற்ற கோரி விபத்தில் சிக்கி யாழ். இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய லோகேஸ்வரன் கார்த்தீபன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

புலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள உறவினர்களை பார்ப்பதற்கு குறித்த இளைஞரும் அவரது தாயாரும் இந்தியா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உறவினர்களுடன் வெளியில் சென்ற வேளை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் சாரதி உட்பட குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் தாயார் ஆபத்தான நிலையிலும், ஏனைய அனைவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு சில மாதங்களில் திருமணம் இடம்பெற இருந்ததாகவும், இதற்கு தயாரான நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.