யாழில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞரொருவரை யாழ். பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.பிரதம தபால் நிலையத்தின் முன்பாக சுமார் நான்கு பேர் மதுபோதையில் நின்றுள்ளதுடன், கைகளால் சிறைச்சாலை வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததுடன், சிறைச்சாலை உத்தியோகத்தர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தம்மை துன்புறுத்தியதாக கூறியே இத்தாக்குதலை குறித்த இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பாக மேலும் விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.