ஹட்டன் வீதி விபத்து: 11 பேர் காயம்!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் வாகனம் ஒன்றும் பார ஊர்தி ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயங்களுக்குள்ளானார்கள்.

படுகாயமடைந்த 11 பேரில் மூன்று ஆண்களும் எட்டு பெண்களும் அடங்குவதாகவும் அவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களில் 17 மற்றும் 18 வயது நிரம்பிய இளைஞர் – யுவதிகளே அதிகம் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செனன் பகுதியிலிருந்து வெளிஓயாவை நோக்கிச் சென்ற வாகனம் ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி ஒன்றும் செனன் சந்தியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சாரதி வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் எதிரே வந்த பார ஊர்தி மீது மோதியது என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.