முல்லைத்தீவில் அச்சுறுத்தப்பட்ட தாயார்!

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய நபரொருவரின் தயார் முல்லைத்தீவில் அச்சுறுத்தப்பட்டதாக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாகவது: லண்டனின் இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் இடம்பெற்றன.

இப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. குறித்த ஊடக செய்திகளை அடிப்படையாக வைத்து போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களின் தரவுகளை இலங்கை புலனாய்வுப் பிரிவு திரட்டுவதாக முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் லண்டனில் புலம்பெயர்ந்து வசிக்கும் நபர் ஒருவரின் குடும்பத்தினர் வசிக்கும் முள்ளியவளை- மாமூலையில் உள்ள அவரவு வீட்டுக்கு கடந்த 18ஆம் திகதி இரவு வேளை சென்ற சில நபர்கள் அவரது தாயாரை அச்சுறுத்தியுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவரது உறவினர்கள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்ட போதும் முறைப்பாட்டினை பொலிஸார் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து முல்லைத்தீவு பகுதியிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் ஊடாக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.