இராணுவத்தால் ஆள்கள் காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு : பிரதி மன்றாடியார் அதிபதி யாழ். மேல் நீதிமன்றில் தோன்றல்

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலான சார்பில் இராணுவ சட்ட அலுவலர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தொடரப்பட்ட ஆள்கொணர்வு மனுக்களில் சட்டமா அதிபரும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளதால், சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மேல் நீதிமன்றில் தோன்றியுள்ளார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி ஆள்கொணர்வு மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களில் 1ம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதில் 9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்கள் யாழ்ப்பானத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து , இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட மூவரின் மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்குத்தொடுனர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு தமது வாதங்களை முன்வைத்ததுடன் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவற்குழி முகாமுக்கு பொறுப்பானவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தற்போதும் இராணுவ சேவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள்.
“முதலாம் எதிர் மனுதாரரான இராணுவக் கட்டளை அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலானவை ஏப்ரல் 2ஆம் திகதி இன்று மன்றில் முன்னிலையாகவேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.
விசாரணைகள் இடம்பெறுகின்றன. விவரம் மற்றொரு செய்தியாக இணைக்கப்படும்.