பனைமட்டை விற்கும் குடும்பஸ்தருக்கு புதிய துவிச்சக்கரவண்டி புலம்பெயர் அன்பரால் வழங்கப்பட்டது!

காரைநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு புலம்பெயர் அன்பர் ஒருவரினால் புதிய துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.

காரைநகர் – ஆயிலியைச் சேர்ந்த மாணிக்கம் வரதராஜா என்பவருக்கே இந்த உதவி வழங்கப்பட்டது.

மேற்படி குடும்பஸ்தர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பனை மட்டைகளைத் தனது துவிச்சக்கரவண்டியில் கட்டிச் சென்று விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருக்கின்றார்.

காரைநகரில் இருந்து பொன்னாலைப் பாலத்தினூடாக கடும் காற்றுக்கு மத்தியிலும் பனை மட்டைகளுடன் கூடிய துவிச்சக்கரவண்டியை உருட்டிக்கொண்டு சென்று அவற்றை விற்பனை செய்வார்.

இவரது துவிச்சக்கரவண்டி பழைய நிலையில் உள்ளதைப் பார்வையிட்ட ஒருவர் அதைத் தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார். இதையடுத்து சிலர் இக்குடும்பஸ்தருக்கு உதவ முன்வந்தபோதிலும் ஏழாலையைச் சேர்ந்தவரும் தற்போது புலம்பெயர் தேசத்தில் வசிப்பவருமான செல்வரட்ணம் திருக்குமார் என்பவரின் நிதியுதவியில் பெறப்பட்ட புதிய துவிச்சக்கரவண்டி நேற்று செவ்வாய்க்கிழமை அவருக்கு வழங்கப்பட்டது.

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் செயற்பாட்டாளர்களும் இணைந்து மூளாயில் வைத்து இக் குடும்பஸ்தருக்கு துவிச்சக்கரவண்டியைக் கையளித்தனர்.