சாறியால் வந்த விபரீதம்!!

கொழும்பு வெள்ளவத்தையில் வசிக்கும் பெண் ஒருவர், தனது கணவருடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று உணவருந்தி கொண்டிருந்த போது, அங்கு வந்த பொலிஸார் குறித்த பெண்ணை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அச்சுறுத்தியுள்ளனர்.இதனை சற்றும் எதிர்பாராத குறித்த பெண் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இந்தியாவில் இருந்து வாங்கி வந்த சாறி ஒன்றை அணிந்து தனது கணவருடன் வெள்ளவத்தையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர் ஒருவரின் உணவகத்துக்கு சென்றுள்ளார்.அங்கு சென்ற தமிழ் தம்பதிகளை கடை உரிமையாளர் சற்று வித்தியாசமாக பார்த்துள்ளார்.

இதை சற்றும் கணக்கில் கொள்ளாமல் உள்ளே சென்று உணவை உட்கொண்டனர். இதன்போது திடீரென பொலிஸார் அந்த உணவகத்துக்கு வந்துள்ளனர்.கடை உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் அங்கு வந்துள்ளனர். உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர்.

நடப்பது ஒன்றும் அறியாமல் அதிர்ச்சிக்குள்ளாகிய கணவர், ஏன் எனது மனைவியை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கின்றீர்கள்? என பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.அதற்கு, உங்களின் மனைவி அணிந்திருக்கும் சாறி தான் பிரச்சினை என பொலிஸார் கூறியுள்ளனர்.

சாறியா? சாறி அணிந்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை என கணவர் கேட்டுள்ளார்.

சாறி அணிவதால் எமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் உங்கள் மனைவி அணிந்திருக்கும் சாறியில் எமது புத்த பெருமானின் படங்கள் உள்ளன. இந்த செயல் மதத்தை நிந்திக்கும் செயலாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போதே தனது மனைவி அணிந்திருந்த சாறியை சற்று உற்று நோக்கியுள்ளார் கணவர். ஆனால் பொலிஸார் கூறிய வகையில் புத்த பெருமானின் புகைப்படம் அதில் இருக்கவில்லை.அந்த சாறியில் பொம்மை படமே காணப்பட்டுள்ளது. அந்த படம் சற்று புத்த பெருமானை போன்று தென்பட்டுள்ளது.

எனினும், பொலிஸார் குறித்த பெண்ணை வெள்வத்தை பொலிஸ் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று சாறியை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.

பின்னர் கணவர் வீட்டுக்கு சென்று வேறு ஒரு உடையை எடுத்து வந்து தனது மனைவிடம் கொடுத்து உடையை மாற்றுமாறு கோரியுள்ளார்.பொலிஸ் நிலையத்தினுள் வைத்தே உடையை மாற்றிய பின்னர் சாறியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் உடை அணிந்தார் என குற்றம் சுமத்தி நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தான் மதத்தை நிந்திக்கும் வகையில் செயற்படவில்லை. நான் அனைத்து மதத்தையும் மதிப்பவள். இலங்கையில் இவ்வாறான சாறிகளை அணியக் கூடாது என தனக்கு தெரியாது. எனவே தனக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் குறித்த பெண் கூறியுள்ளார்.எனினும், இதனை கேட்க மறுத்த பொலிஸார் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது பொம்மை சாறி என்பது இலங்கையில் டிரண்டாக உள்ளது. குறிப்பாக தமிழ்ப் பெண்களே இவ்வாறான சாறிகளை அணிவதில் ஆர்வமாக உள்ளனர்.எனினும், இலங்கை பொலிஸார் இதனை சற்று வித்தியாசமாகவே பார்கின்றனர்.எனவே இது தொடர்பில் தமிழ் பெண்கள் சற்று அவதானமாக இருக்க வேண்டும்.