நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தின் 138ஆவது வருடாந்த மாநாடு

நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தின் 138ஆவது வருடாந்த மாநாடு சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகின்றது. கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான இந்த மாநாடு இன்று 28ஆம் திகதி வரையும் தொடர்கின்றது. 

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இலங்கையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளது.

 நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியை அடைவதற்கு நிலையான அமைதியை ஒரு வாகனமாக்கிக்கொள்வது, சட்டத்துக்குப்புறம்பான குடியேற்றங்களால் உலகு எதிர்கொள்ளும் சவாலில் நாடாளுமன்றங்களின் பங்களிப்பைப் பலப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக இந்த ஒன்றியம் பணியாற்றி வருகின்றது. 
138ஆவது மாநாட்டில் நேற்றை தினம் நிலையான அபிவிருத்தி இலக்குகள் என்பது தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை முன்னகர்த்திய 5 பேர் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் ஒருவராக இருந்தார். சேர்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மிலோர்ட் மிஜாடோவிக், ஆர்ஜென்ரீனா நாட்டு செனட்டர் லுசிலா கிறசெல், லிசொதோ செனட்டர் பீட் லிசாஓனா பீட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த நாடியா இஸ்நர் ஆகியோரும் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இருந்தனர்.
நிலைத்தன்மை மற்றும் நெகிழ்திறன் கொண்ட சமூகத்தை நோக்கிய மாற்றம் என்கிற தலைப்பில் நேற்றைய விவாதம் இடம்பெற்றது.