சிங்கப்பூரிலிருந்து கடத்திவரப்பட்ட தங்க ஆபரணங்கள் மீட்பு!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சிங்கப்பூர் நாட்டில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஒருவரின் பயணப் பொதியை சோதனை செய்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தங்க ஆபகரணங்களை மீட்டுள்ளதாக பிரதி சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் விபுல மினுவான்பிட்டிய தெரிவித்தார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரின் பயணப் பொதியில் இருந்தே சுமார் 3 கிலோ கிராம் எடையுடைய தங்க ஆபரணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் அரச உடமையாக்கப்பட்டதுடன், சந்தேக நபருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரை விடுவித்ததாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் விபுல மினுவான்பிட்டிய மேலும் தெரிவித்தார்.