தேர்தல் காலங்களில் மட்டும் எங்களை கருத்தில் கொள்ளாதீர்கள் –மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள்!

தேர்தல் காலங்களில் மட்டும் எங்களை கருத்தில் கொள்ளாது ஏனைய காலங்களிலும் எங்களை கருத்தில் கொண்டு வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க எமது அரசியல் வாதிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என மன்னார் மாவட்ட வேலை இல்லா பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலை இல்லாத பட்டதாரிகள் வடமாகாண வேலை இல்ல பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பின் பெயரில் இன்று (24) சனிக்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வருடம் 2017 ஆண்டு பட்டம் பெற்ற மற்றும் அதற்கு முன் பட்டம் பெற்று பதிவுகளில் விடுபட்ட பட்டதாரிகளின் பதிவுகளை மேற் கொள்ளும் நடவடிக்கைகள் இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்டு பதிவுகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டாதாரிகளே இவ்வாறு தெரிவித்தனர்.

பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் தஎமது பெற்றோர் தங்களை கல்வி கற்க வைத்தனர்.நாம் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று இன்று வேலை இல்லாத நிலையில் வேலை இல்லா பட்டதாரியாக இருக்கின்றோம். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளுக்கு பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர்கள் நாம் அறிகின்றோம்.

ஆனால் குறித்த வெற்றிடங்களை வேலை இல்லா பட்டதாரிகளான எங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படாது வேறு விதமாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம். குறித்த நடவடிக்கைகளினால் நாங்கள் பெரிதும் துன்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டும் எங்களை கருத்தில் கொள்ளாது ஏனைய காலங்களிலும் எங்களை கருத்தில் கொண்டு வேலையில்லா பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எமக்கு ஆவனம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுவதாக மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.