அக்காவை கொன்ற தங்கை

அக்காவின் கணவர் மீது ஆசை கொண்ட காரணத்தினால் இளைஞருடன் சேர்ந்து அக்காவை பச்சிளம் குழந்தை முன்பாக தங்கை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் ‘கலாபக் காதலன்’. படத்தில் ஆர்யாவிற்கும் ரேணுகா மேனனுக்கும் ஊர் அறிய திருமணம் நடைபெறும்.

பின்னர் மேல்படிப்பிற்காக அக்கா வீட்டில் தங்கும் ரேணுகா மேனனின் தங்கை அக்ஷயா, அத்தான் ஆர்யாவை ஒருதலையாக காதலிப்பார். ஆர்யா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் ஆர்யா நினைப்பில் வாழ்வார்.

‘அக்கா ஒரு பக்கம் வாழட்டும். நாமும் வாழ்வோம்’ என தன் பங்கு நியாயத்தை எடுத்துவைப்பார் அக்ஷயா.

ஆனால் ஆர்யா அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். ஒரு கட்டத்தில் ஆர்யா கிடைக்காத விரக்தியில், அத்தான் நினைப்பில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வார் அக்ஷயா.

உறவுச் சிக்கலை சிறப்பாக கையாண்டிருந்த இப்படம். இப்படத்தைப் போல அக்கா கணவர் மீது ஆசைகொண்ட தங்கை ஒருவர், தன் உடன்பிறந்த அக்காவையே கொலை செய்யும் அளவிற்கு துணிந்திருக்கிறார். திருப்பூரில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் இடுவம்பாளையம் அருகேயுள்ள காமாட்சி நகர் பகுதியில் திருவண்ணாமலையை சேர்ந்த பூபாலன் மற்றும் நதியா தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கின்றனர். பூபாலன் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 14-ம் தேதி பூபாலன் பனியன் நிறுவனத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் நதியா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்து பார்த்த பூபாலனின் சகோதரர் ஜீவா தனது அண்ணி நதியா கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து திருப்பூர் வீரபாண்டி போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை மேற்கொண்டனர். மேலும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜூம் சம்பவ இடத்திற்கு வந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரனை மேற்கொண்டார்.

விசாரணையில் அன்று மாலை 6 மணிவரை அக்கம்பக்கத்தினரோடு நதியா பேசிக்கொண்டிருந்ததாகவும் அதற்கு பின்னரே அவர் வீட்டிற்குள் சென்றதாகவும் அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்குள் ஒரு கொலையை செய்துவிட்டு ஐந்து சவரன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசாருக்கு லேசாக நதியாவின் சகோதரியான ரேகாவின் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே ரேகாவிடம் விசாணையை மேற்கொண்டர் போலீசார்.

அப்போது கொலை நடந்த அன்று மாலை தாடியுடன் ஒருவர் வந்து முகவரி கேட்டதாகக் கூறியிருக்கிறார் ரேகா. இதனையடுத்து ரேகா மீது போலீசாருக்கு இன்னும் சந்தேகம் தீவிரமானது. உடனே ரேகாவின் செல்போனை பெற்ற போலீசார், அதில் வந்த அழைப்புகளை சோதனை செய்தனர்.

அதில் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் ரேகா அதிகளவில் பேசியது தெரிய வந்தது. குறிப்பாக கொலை நடந்த அன்று அதிகளவில் நாகராஜனுடன் பேசியுள்ளார். இதனடிப்படையில் போலீசார் நாகராஜிடம் சந்தேகமடைந்து விசாரணை மேற்கொண்ட போது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

அவரது கையில் இருந்த வெட்டு காயம் குறித்து போலீசார் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் நாகராஜ் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்.

ரேகா திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதால் நாகராஜன் உடன் தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கணவரிடம் விவாகரத்து கேட்டிருந்த ரேகாவிற்கு அக்கா கணவர் பூபாலன் எதார்த்தமாக உதவி புரிந்துள்ளார்.

இதனால் நன்கு சம்பாதித்து வரும் அக்காவின் கணவர் பூபாலன் மீது ரேகாவிற்கு அதிக ஆசை ஏற்பட்டிருக்கிறது. அவரை ஒருதலையாக விரும்பியிருக்கிறார். அக்கா இருந்தால் அத்தான் உடன் சேர்ந்த வாழ முடியாது என நினைத்திருக்கிறார் ரேகா.

இதனால் நாகராஜ் உதவியுடன், அக்காவை அவரது பச்சிளம் குழந்தை முன்பு கழுத்தை அறுத்து இருவரும் கொலைசெய்திருக்கின்றனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.