கண்டி திகன மொரகஹமுல்ல பகுதியில் வர்த்தக நிலையங்கள் இரண்டுக்கு தீ வைத்தமை தொடர்பில் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 பேரில் 8 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த 8 பேரும் அந்த சம்பவத்துடன் தொடர்புபடவில்லை என்பது பொலிஸாரின் மேலதிக விசாரணைகள் ஊடாக தெளிவானதையடுத்து அது தொடர்பில் நீதிமன்றுக்கு பொலிஸார் தெளிவுபடுத்தியதாகவும் அதனையடுத்தே அந்த 8 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த இரு கடைகள் மீதான தாக்குதல் தொடர்பில் தெல்தெனிய பொலிஸாரால் 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தெல்தெனிய மாவட்ட நீதிவான் எம்.எச். பக்கீர்தீன் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்ற போது மேலதிக விசாரணை அறிக்கை தெல்தெனிய பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது. இதன்போது குறித்த கடைகள் எரிப்பு விவகாரத்தில் கைதாகியுள்ள 8 பேருக்கு தொடர்பு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந் நிலையிலேயே அந்த 8 பேரையும் விடுவித்துள்ள நீதிவான் எம்.எச். பக்கீர்தீன் ஏனைய 16 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி லொறி மோதி முச்சக்கர வண்டியின் பக்கக் கண்ணாடியில் சிறு சேதம் ஏற்பட்ட விவகாரத்தில் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
எனினும் குறித்த லொறி சாரதி அம்பல பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி லொறியில் சென்று கொண்டிருக்கையில் அவரைப் பின்தொடர்ந்து இளைஞர்கள் குழுவொன்று கண்டி – திகன பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகில் வைத்து அவரை மடக்கிப் பிடித்து கீழே இறக்கி அவரை தாக்கியுள்ளனது.
தலைக்கவசங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இருந்த கதிரைகள் உள்ளிட்டவற்றால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த சாரதி படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் கண்டி போதன வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் சாரதியைத் தாக்கியதாகக் கூறப்படும் 4 இளைஞர்களை கைது செய்து தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இதனிடையே கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.குமாரசிங்க எனினும் 41 வயதான சாரதி கடந்த மார்ச் 3 ஆம் திகதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தகக்து. இதனையடுத்து கண்டியில் கலவரம் இடம்பெற்றிருந்தது.