தந்தையை விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்!

அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரை விடுதலை செய்யுமாறு அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்தவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் அவர்களின் மனைவியின் இறுதிக் கிரியை கடந்த 18ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்ற இறுதி கிரியைகளில் சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் கலந்து கொள்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த சிறார்கள் தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு இன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதி அவர்களிற்கு கிடைக்கும் வகையில் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஆனந்தசுதாகரின் புதல்வி மரணச் சடங்கிற்கு வருகை தந்திருந்தபோது, ஆதரவு தேடி தந்தையின் கரத்தை இறுகப் பற்றிப்பிடித்தவாறு சிறைச்சாலைப் பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரையும் கலங்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.