வட்டவளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

வட்டவளை – டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த எஸ்.சரவணன் (வயது –30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பித்துள்ள நிலையில், வீதி மற்றும் ஆலயத்தின் அலங்கார வேலைப்பாட்டிற்காக அத்தோட்டத்தின் தொழிற்சாலையிலிருந்து மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது.

இதன்போது பிரதான மின் இணைப்பிலிருந்து மின்சாரத்தை இணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட பொழுது மின்சாரம் தாக்கி இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பான மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.