மருமகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மகனின் வாழ்க்கையை கெடுத்த தந்தை கைது!!

சென்னையில் மருமகள் மீது தவறான பார்வை கொண்ட மாமனார், மகனின் வாழ்க்கையை அழிக்க செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணகி நகரை சேர்ந்தவர் சுரேகா. இவருக்கும் தீபக் என்பவருக்கும் கடந்த 2015-ல் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு தீக்‌ஷா என்ற குழந்தை உள்ளார்.இரண்டாண்டுகள் மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் வாழ்வில் மர்மநபர் அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் பிரச்சனை தொடங்கியது.

கடந்தாண்டு சுரேகா செல்போனுக்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் வந்தன. சில நாட்களில் தீபக் செல்போனுக்கும், அவரின் அப்பா கபாலீஸ்வரன் செல்போனுக்கும் சுரேகாவின் நடத்தை சரியில்லை என குறுஞ்செய்திகள் வந்தன.

இதையடுத்து மனைவியுடன் தீபக் சண்டையிட்டுள்ளார். ஒருகட்டத்தில் சந்தேகம் அதிகரிக்க சுரேகாவை வீட்டை விட்டு துரத்திய தீபக் விவாகரத்துக்கு மனு அளித்துள்ளார்.இந்நிலையில், தனது தந்தை வீட்டில் இருந்த சுரேகாவுக்கு மீண்டும் ஆபாச குறுஞ்செய்திகள் வந்த நிலையில் பொலிசிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது சுரேகாவின் மாமனார் கபாலீஸ்வரன் எனத் தெரியவந்தது.அவரை கைது செய்து பொலிசார் நடத்திய விசாரணையில், மருமகள் மீது தனக்கு தவறான எண்ணம் இருந்ததாகவும் அதையடுத்து அவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.இதை சுரேகா பெரிதுப்படுத்தாத நிலையில் அவரை பழிவாங்கத் துடித்துள்ளார்.

இதையடுத்து மகனிடமிருந்து சுரேகாவை பிரிக்க, அவர் குறித்து தவறான தகவலை குறுஞ்செய்தியாக அனுப்பியதாக கபாலீஸ்வரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.