அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது

அவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

”கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, 10 நாளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் கடந்த 6ஆம் நாள் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இது வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாடு முற்றிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது எனவே, அவசரகாலச்சட்டத்தை நீடிக்கப்படாது.

இனிமேல் அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

காவல்துறை மா அதிபர் மற்றும மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று நடத்தப்பட்ட சந்திப்பின் போது, சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. விரைவில் இதுபற்றி இறுதியான முடிவு எடுக்கப்படும்.

எனினும், அவசரகாலச்சட்டம், மற்றும் சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவை எடுப்பார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.