இனி 15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை!

15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும், தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 16 வயது இதுவரை காணப்பட்டது. இதில் இருந்து 15 வயதாக ஆகக் குறைந்த வயதெல்லையை குறைப்பதற்கான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதனால் இந்த விடயத்தை முன்னெடுக்கக் கூடியதாகவுள்ளதென திணைக்களம் தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக தற்போதிருந்தே விண்ணப்பிக்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களத்தின் இயக்க செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவர்கள் தமது அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபரின் ஊடாக அனுப்பி அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியுமென ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.