சிறிலங்காவில் 100 மில்லியன் டொலரில் சூரியசக்தி மின் திட்டங்கள் – புதுடெல்லி மாநாட்டில் அறிவிப்பு

சிறிலங்காவில் 100 மில்லியன் டொலர் செலவிலான இரண்டு சூரியசக்தி மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாக புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

சிறிலங்காவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் இரண்டு இலட்சம் வீடுகளில், கூரைகளில் சூரிய சக்தி மின்தொகுதிகள் அமைக்கப்படுவதற்கு 50 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

மேலும் 50 மில்லியன் டொலர் செலவில், சிறிலங்காவில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், கல்லூரிகள், அரசாங்க நிறுவனங்களின் கூரைகளில் சூரிய சக்தி மின் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.

சிறிலங்காவுக்கு சூரியசக்தி மின் திட்டங்களை வழங்க முன்வந்தமைக்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபார சிறிசேன நேற்றைய மாநாட்டின் போது, அனைத்துலக சூரியசக்தி கூட்டமைப்பு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.