பேஷ்புக்கிற்காக வீதியில் இறங்க தயாராகும் கம்மன்பில!

பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடக கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுடன் வீதியில் இறங்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். கண்டியில் ஏற்பட்ட மோதல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

இதற்கமைய அவசரகாலச்சட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை மறுநாள் அவசரகாலச் சட்டம் இரத்தாகின்றது. எனினும் பேஷ்புக் தடை இன்னும் நீக்கப்படவில்லை.

இனவாதத்தை தடுப்பதாக கூறி அரசாங்க விரோத ஊற்றாக இருக்கும் சமூக வலைத்தளங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்த தடையானது செயற்பாட்டு ரீதியானது அல்ல. இளைஞர், யுவதிகள் வீ.பீ.என் வழியாக திருட்டுத்தனமாக பேஷ்புக் பார்க்கும் போது ஜனாதிபதியும் பிரதமரும் திருட்டுத்தனமாக பேஷ்புக்கில் வந்துள்ளனர்.

பகையுணர்வை பரப்ப பேஷ்புக்கை பயன்படுத்துகின்றனர் எனக் கூறி, அதனை தடை செய்வது கேலிக்குரியது.

உலகத்திற்கு நகைச்சுவையை வழங்காது உடனடியாக பேஷ்புக் தடையை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.