யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை

2013ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதிக்கும் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் 3 தடவைகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது. விசாரணைகளின் நிறைவில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கேடுகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.

சந்தேகநருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சட்ட மா அதிபரால், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
“எதிரி குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார். அந்தக் குற்றத்துக்காக அவர் இன்று வருந்துகிறார். அவரது குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு” எதிரியின் சட்டத்தரணி மன்றில் கருணை விண்ணப்பம் செய்தார்.

“எதிரி தாமாக முன்வந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடும் பெற்றுக்கொடுக்க மன்று உத்தரவிடவேண்டும்” என்று அரச சட்டவாதி சுகந்தி கந்தசாமி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“எதிரி குற்றச்சாட்டுக்களை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளார். 3 குற்றங்களுக்கும் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். 15 ஆயிரம் ரூபா தண்டமாகச் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.